‘தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

Thursday, November 20, 2014

கிளியோபாட்ராவுக்கு எதுக்கு த்ரெட்டிங்கு... மோனலிசாவுக்கு எதுக்கு ப்ளீச்சிங்கு? - Vikatan
தோட்டா ஜெகன், ஓவியங்கள்: ஹரன்
னைவிகளே, காதல் துணைவிகளே, தாலி கட்டிய நாள் முதலாய் எங்கள் சந்தோஷத்துக்கு வேலிகட்டிய மாமியார் பெத்த மகள்களே, கடவுளின் துகள்களே! தந்திரத்தால், தலையணை மந்திரத்தால், தொட்டுத் தாலி கட்டிய எங்களை எந்திரமாகச் சுழலவிடும் திரிபுரசுந்தரிகளே!
கல்யாணத்துக்கு முன்னால இனிக்க இனிக்கப் பேசினீங்க... ஆனா, கல்யாணம் ஆனதில் இருந்து தட்டு டம்ளர்களை எடுத்து வீசுறீங்க! சத்தியமா நினைச்சுப் பார்க்கலை இப்படி ஒரு மாறுதலை; அதனாலதான் அரசாங்க பாருக்குத் தேடிப் போறோம் ஆறுதலை. கொஞ்சிப் பேசிய குரல் எங்கே, கிள்ளி விளையாடிய விரல் எங்கே, எங்க காதுல பாடின 'சிநேகிதனே... சிநேகிதனே...’ பாட்டு எங்கே, ரிஷப்சனுக்கு வாங்கின ரேமண்ட்ஸ் கோட் எங்கே... ஆமா, நேத்து சட்டையில வெச்சிருந்த 100 ரூபாய் நோட்டு எங்கே?
உங்களை கரெக்ட் பண்ணி, கல்யாணம் பண்ண உதவின ஃப்ரெண்ட்ஸ்களையே கட் பண்ணச் சொல்லி ஊட்ட ஆரம்பிக்கிறீங்க பொங்கச்சோறு... கடைசில எங்க நெருங்கிய நட்பு வட்டாரத்தைச் சுருங்கிய நட்பு வட்டாரம் ஆக்கிட்டுத்தான் போடுறீங்க மத்தியான சோறு. நட்புனா என்ன தெரியுமா? சின்ன பிரச்னைக்குக்கூட செவுத்துல காலைவெச்சு உதைக்கிற குங்ஃபூ இல்லம்மா... சுமாரா ஆடினாக்கூட 'சூப்பர்’னு மார்க் போடுற குஷ்பூம்மா... குஷ்பூ! காபி குடிச்சுட்டா 'கப்’பைத் தூக்கி எறியலாம்... ஆனா, கல்யாணம் பண்ணிட்டோம்னு நட்பைத் தூக்கி எறிய முடியுமா?  
ஜனவரி மாசம் ரெடி பண்ணின சாம்பாரை, பிப்ரவரி வரைக்கும் ஃப்ரிட்ஜ் என்ற மார்ச்சுவரியில் பாதுகாப்பா வைக்கிறீங்க. டி.வி, டேப் ரிக்கார்டரைத் தவிர மத்த எல்லாத்தையும் அதுக்குள்ளே திணிக்கிறீங்க.  ஷாப்பிங் போயி லேட்டானாலோ, சீரியல் சென்ட்டிமென்ட்டுக்கு எமோட் ஆகிட்டாலோ, உடனே உப்புமா கிண்டிக் குடுக்கிறீங்க பாருங்க... மக்கழே, வாரம் ஒரு தடவை கிண்டுனாதான் அது உப்புமா... வருஷம் முழுக்க அதையே கிண்டுறது ரொம்பத் தப்பும்மா!
போருக்குப் போனவன்கூடப் பொழைச்சு வந்திருக்கான், ஆனா பொண்ணுங்ககூட புடவை எடுக்கப் போனவன், கூடாரம் கவிழ்ந்து சேதாரமாகிப்போனதாதான் பலப் பல வரலாற்று ஆதாரங்கள் சொல்லுது. பொண்டாட்டிகூட துணியெடுக்க 'அமர்க்களம்’ அஜித் போல போன பல பேரு, 'ஆரம்பம்’ அஜித் போல தலை நரைச்சு வந்த தமாஸு ஊரு முழுக்க நிறையவே இருக்கு.
அரசமரம் போல இருக்கும் புருஷ மரங்களின் தேக்கு உடம்பையே உதறவைக்கிற அளவு, புருஷனை அதட்டுறதுல பிஹெச்.டி., முடிச்ச நீங்க, கிச்சன்ல கரப்பான்பூச்சியையும், பாத்ரூம்ல பல்லியையும் பார்த்துட்டுப் போடுவீங்க பாருங்க ஒரு சத்தம்.... அதைக் கேக்கிற எங்களுக்கு, ஏதோ விட்டலாச்சார்யா வீட்டுக்குள்ளயே பேய் வந்த மாதிரி தலைக்கு ஏறும் பித்தம்! ஒரு தக்குனூண்டு கரப்பான்பூச்சிக்கே பயந்து கணவனைத் துணைக்குக் கூப்பிடுறீங்களே, நாங்களும்தான் பொண்டாட்டிக்குப் பயப்படுறோம். ஆனா, என்னைக்காவது அப்படில்லாம் கத்திக் கூப்பாடு போட்டிருக்கோமா!?
எண்ணெயை விட்டு செஞ்ச பன்னு மேல கொஞ்சம் வெண் ணையைத் தடவுன மாதிரி, லைட்டா தொப்பை வந்தாலே, 'உடம்பைக் குறை, வயித்தை மறை’னு, காவடி சிந்து முதல் கண்ணீர் சிந்து வரை பேச்சா பேசிக் கொல்றீங்க. இல்ல தெரியாமத்தான் கேட்கிறேன்... இது என்னம்மா நியாயம்? டயட்டாவும் புருஷன்தான் இருக்கணும், கொயட்டாவும் புருஷன்தான் இருக்கணுமா?
ஐ டோன்ட் நோ ஒய்... ஆல் ஹஸ்பண்ட்ஸ் சொல்லிங் பொய். இது எதுனாலனு உங்களுக்குப் புரியணுமா? நாங்க சொல்ற எல்லா பதில்களுக்கும், நீங்க திருப்பிக் கேள்விகளா கேட்டா, நாங்க பதிலா சொல்லுவோம்..? பொய்தான் சொல்லுவோம்! வீட்டுக்கு வந்த மனுஷன், பசி ஏப்பம்விட்டாக்கூட பீர் ஏப்பம்னு நினைச்சு மோப்பம் புடிக்கிறது, 'சாப்பாடு போடும்மா’னு கெஞ்சிக் கேட்டாலும், ரிமோட்டைத் தூக்கி தலையில அடிக்கிறது, வாய் திறந்து பேசினாலே நெருப்பா முறைக்கிறது. வேண்டாம் பேபிம்மா கோவம், ஆம்பளைங்க ஆல்வேஸ் பாவம்!
கல்யாணமோ, காதுகுத்தோ, சீமந்தமோ, சினிமாவோ என்னைக்காவது சீக்கிரமா கிளம்பி இருக்கீங்களா? எட்டு முழம் ஸாரியை நீங்க பாடில சுத்தறதுக்குள்ள, அசோக் லேலண்டு லாரிக்கே பாடி கட்டிடலாம். நீங்க மேக்கப் முடிக்கிறதுக்குள்ள, 'இதுவரைக்கும் நீ மந்திரி, இந்த நிமிஷத்துல இருந்து நீ எந்திரி’னு அம்மா மினிஸ்ட்ரியையே மாத்திடுறாங்க.  கிளியோபாட்ராவுக்கு எதுக்கும்மா த்ரெட்டிங்கு, மோனலிசாவுக்கு எதுக்கும்மா ப்ளீச்சிங்கு? தகரத்துக்கு ரப்பிங் பாலிஷ் போடுறது லாஜிக்... தங்கத்துக்கு டால்கம் பவுடர் போடுறதுல என்ன மேஜிக்? நீங்கள்லாம் தங்கம்மா... தங்கம்!
மனைவிங்க ஊருக்குப் போற அன்னைக்குத்தான் பல கணவர்கள் பாருக்குப் போறாங்க. அதைப் புரிஞ்சுக்காம, 'கதவைத் தொறந்து போட்டுத் தூங்காதீங்க... கைலியைத் தொறந்து போட்டுத் தூங்காதீங்க... சிலிண்டரை ஆஃப் பண்ணுங்க, டி.வி சுவிட்சை ஆஃப் பண்ணுங்க’னு மொபைல்லயே குடும்பம் நடத்துறீங்களே... முடியலைம்மா!
எதையாவது புரியிற மாதிரி பேசுறீங்களா? 'அஞ்சு நிமிஷம் சும்மா இருக்குதா... அப்படியே அப்பன்போல’னு நீங்க சொன்னா, லேப்டாப்பை மூடிவெச்சுட்டு நாங்க குழந்தையைப் பார்த்துக்கணும்னு அர்த்தம். 'ஆபீஸுக்கு சீக்கிரம் போகணுமா?’னு நீங்க கேட்டா, 'பாத்திரம் நிறைய சேர்ந்திடுச்சு... கொஞ்சம் வெளக்கித் தர்றீங்களா?’னு அர்த்தம். 'தலை வலிக்குது’னு சொன்னா, ஈவ்னிங் வரப்பவே டிபன் வாங்கிட்டு வரணும்னு அர்த்தம்... இதையெல்லாம் புரிஞ்சுக்கவே கோனார் நோட்ஸ் ஒண்ணு போடணும்!
கல்யாணமான நாளுல இருந்து வீட்டுக்குள்ள முணுமுணுப்பும், தொணதொணப்பும்தான் இருக்கே தவிர, என்னைக்காவது ஒரு கிளுகிளுப்பு இருக்குதா? வருஷத்துல 365 நாள் இருக்கு... அதுல ஒரு நாள் உங்க பொறந்தநாளு. அதை மறந்தா என்னமோ, அம்மாவைச் சந்திச்சுட்டு வந்த அதிருப்தி எம்.எல்.ஏ-வை கேப்டன் முறைக்கிறதுபோல பாக்கிறீங்க. சரி பொறந்த நாளுகூட ஓ.கே... சோஷியல் மேட்டர் பண்ணிக்கலாம். ஒவ்வொரு கணவனும், தன் சந்தோஷத்தின் நினைவு நாளா நினைக்கிற கல்யாண நாளை, நினைவிலேயே வைக்கசொன்னா எப்படிம்மா?
வீட்டுக்கு வந்தவுடனே 'வாயை ஊது’னு சொல்றீங்க. அதுவே விவரமா ஏதாவது பேசுனா 'வாயை மூடு’னு சொல்றீங்க. இதைத்தான் 'எகனைக்கு மொகனை’னு சொல்வாங்க. எங்க மேல ஏன் இவ்வளவு குரோதம்? மனைவிகளே... மனைவிகளே, நீங்கள் எங்களை வீட்டுக்கு வெளியே தூக்கியெறிந்தாலும், நாங்கள் வீட்டு வாசலில் செருப்பாகக் கிடப்போம். துணைவிகளே, துணைவிகளே, நீங்கள் எங்களைக் கோபத்தில் கும்மியெடுத்தாலும், குழம்புச் சட்டியில் பருப்பாகக் கொதிப்போம்!
'கேம் விளையாடிட்டுத் தர்றேன்... செல்போனைக் குடு’னு கேட்கிறப்பவே, அதுல பாம் செட் பண்ணுவீங்கனு எங்களுக்குத் தெரியாதா? பொம்பளைங்கன்னா கடுகு டப்பா, மொளகு டப்பால காசை ஒளிச்சுவைக்கிறதும்... ஆம்பளைங்கன்னா கால் லிஸ்ட், கான்டாக்ட் லிஸ்ட்ல ரிஸ்க் நம்பரை அழிச்சுவைக்கிறதும் சகஜம்தானே!  
ஃபேஸ்புக்ல எங்களோட நடமாட்டத்தை உளவுபார்க்க ஃப்ரெண்ட்ஸ் ஐடி, ஃபேக் ஐடினு வர்றீங்க. ஆட்டோட தாடியைப் பார்த்தே, அது இளங்கறியா, கடுங்கறியானு  கணிச்சுச் சொல்ற நாங்க, எங்ககூட சாட்டிங் போடுறது லேடியா இல்ல கேடியானு கண்டுபிடிக்கவா மாட்டோம்!? ஆல் மனைவீஸ் நல்லா கேட்டுக்கங்க... நைட்டிக்குத் துப்பட்டாவா துண்டு செட்டாகாது, ஃபேஸ்புக்ல உங்க துப்பறியும் படம் ஹிட்டாகாது!
பக்கத்து வீட்டு பாட்டில இருந்து நீங்க போற பியூட்டி பார்லர் ஆன்ட்டி வரை எங்களை 'அண்ணா’னு கூப்பிடச் சொல்லிவெச்சிருக்கீங்களே... அதுதான் வன்கொடுமைகளுக்கு மத்தியில் பெண்கொடுமை!
ஒரு புருஷனோட பிரச்னைகளைப்  புரிஞ்சுக்கணும்னா, ஒரு மாசம், வேணாம் ஒரு வாரம் நீங்க புருஷனா இருந்து பாருங்க... ஓ சயின்ஸ், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி அதுக்கு அனுமதிக்காதா? அப்போ ஆண்டவனாப் பார்த்து பொண்டாட்டிங்களுக்கு ஒரு பொண்டாட்டி அனுப்பிவெச்சாதான், பொண்டாட்டிங்களுக்கு, பொண்டாட்டிங்க பண்ற டார்ச்சர் புரியும்!­­
நலம் 360’ - 21 - vikatan
மருத்துவர் கு.சிவராமன், படம்: வீ.சக்தி அருணகிரி
குழந்தை நலத் துறையில் பதறவைக்கும் ஒரு சொற்றொடர், Sudden infant death syndrome. காரணமே இல்லாமல் திடீரென நிகழும் பச்சிளம் குழந்தை மரணத்துக்கு இப்படி ஒரு பெயர். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில்கூட, இந்தப் பிரச்னையால் குழந்தை இறப்புகள் ஏராளம். பெற்றோருக்குப் பக்கத்தில் குழந்தையைப் படுக்கவைப்பதும்கூட இந்த இறப்புக்கு  முக்கியமான காரணம் என்பதை, சமீபத்திய ஆராய்ச்சி மூலம் அறிந்துள்ளது அமெரிக்கக் குழந்தைகள் நல அமைப்பு. உடனே அந்த அமைப்பின் ஆய்வாளர்கள் அவசர அவசரமாக, குழந்தைகள் பாதுகாப்பாகத் தூங்குவதற்கான பழக்கத்தை (safe sleep practice) வெளியிட்டனர். அதன்படி, தூங்கும் இடம் காற்றோட்டமாக இருக்க வேண்டும், முதுகு அழுந்தும்படியாக  குழந்தை தூங்க வேண்டும். வயிறு அழுந்தும்படியாகக் குப்புறப் படுக்கவிடக் கூடாது; பக்கவாட்டில் புரண்டுவிடாது இருக்க, அணைக்கும்படியாக மிருதுவான பருத்தித் துணி படுக்கை அவசியம்... என அந்தப் பட்டியல் நீண்டது. ஆனால், அதற்கு எல்லாம் நம்மிடம் பல தலைமுறைகளாக இன்னொரு பெயர் உண்டு... அது தொட்டில் அல்லது தூளி!
'கொவ்வை இதழ் மகளே - என்
குவிந்த நவரத்தினமே
கட்டிப் பசும்பொன்னே - என்
கண்மணியே கண் வளராய்’ எனத் 
தாலாட்டு பாடி, தூளியில் ஆட்டித்   தூங்க வைக்கும் நலப் பழக்கம் 2,000 வருடங்களாக நம்மிடம் உண்டு. ஆனால், தூளியில் குழந்தையைப் போட்டு, நாக்கை அசைத்து தாலாட்டு பாடி குழந்தையின் கவனத்தை ஈர்த்து, கண்களால் அதன் சிந்தனையை ஒருமுகப்படுத்தி, கவனத்தை நிலைநிறுத்திய சில மணித்துளிகளில், அந்தக் குழந்தை தன்னை மறந்து தன் நாவை ஆட்டிப் பார்த்து, பின் அப்படியே பாடலின் ஒலியில் சொக்கி உறங்கும். இந்த அற்புதப் பண்பாடு இப்போது கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போய்வருகிறது. வழக்கமாக அம்மாவின் பழைய பருத்திச் சேலைதான் தூளி செய்யும் துணி. அன்னையின் மணத்துடன், இருபக்கமும் பருத்திப் புடவையின் அணைப்பில் முதுகில் மட்டுமே படுக்க முடியுமான தொட்டிலின் துணிக்கற்றைக்கு நடுவே, தொட்டில் கம்பு ஒன்றைச் செருகி இருப்பார்கள். காற்றில் ஆடும்போது சுருண்டுகொண்டு, உள்ளே காற்று இறுக்கம் வந்துவிடாமல், தொட்டிலை எப்போதும் விரித்திருக்க உதவும் அந்தக் கம்பு. அதை அங்கு வைத்த பாட்டிக்கு சத்தியமாக Sudden infant death syndrome  பற்றி தெரியாது. safe sleep practice குறித்து தேட அப்போது இணையம் என்ற ஒன்றே இல்லை.  
இன்றைய அறிவியலின் தேடலுக்குச் சற்றும் குறைவில்லாத உலக நாகரிகத் தொட்டிலான தமிழ் மரபு கற்றுத்தந்த நலப் பழக்கம்தான், தூளி. சிறுநீர் கழித்தால் படுக்கையில் தங்காமல் ஓடும் இந்தத் துணித்தூளியில், அதன் தொங்கி ஆடும் குணத்தால், பூரான் - பூச்சிகளும் ஏறாது. குழந்தைகளுக்கு உணவு புரையேறிவிடாமல் காக்கும் படுக்கை நுட்பமும் தூளியில் உண்டு. கூடவே, கொஞ்சம் குலப்பெருமையும், குசும்பு எள்ளலும், உறவின் அருமையும் என எல்லாம் ஏற்றி தூளியில் தாலாட்டு பாடி அமைதியாக உறங்கவைத்தும், ஆர்ப்பரிக்க எழுந்து நிற்க வைக்கவும், களம் அமைத்தது தொட்டில்பழக்கம் மட்டும்தான். நகரங்களில் பழைய பேன்ட்டை ஆணியில் மாட்டிவைத்திருப்பதுபோல் சுவரில் குழந்தையை ஒரு பையில் போட்டுத் தொங்கவிட்டிருப்பதைப் பார்க்கும்போதும், '20 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு cradle வந்திருக்காம்; நெட்டில் ஆஃபர் வந்திருக்கு’ எனப் பேசுவதைக் கேட்கும்போதும், இன்னும் எத்தனை விஷயங்களை இப்படித் தொலைக்கப் போகிறோமோ என மனம் பதறுகிறது!
'தாய்ப்பாலுக்கு நிகர் ஏதும் இல்லை’ என்பது நாம் அறிந்ததே. அதே தாய்ப்பாலை மார்பகத்தில் இருந்து நேரில் பெறாமல், பிடித்துவைத்து, புட்டியில் குடிக்கும் நகர்ப்புறக் குழந்தைகள் இப்போது அதிகம். வழியே இல்லாதபோது இது சிறந்த மாற்றாகக் கருதப்பட்டாலும், தாயின் மார்போடு அணைந்து, நேராகப் பால் அருந்துவதற்கு இது இணை ஆகாது. நேராக தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்குக் கிடைக்கும் கூடுதல் மருத்துவப் பயனை, கொஞ்சம் உற்றுப் பார்த்தால், உச்சிமுடியும்கூடச் சிலிர்க்கும். பச்சிளம் குழந்தையின் வாயில், உமிழ் நீரில் இருக்கும் கிருமித்தொற்றை, அந்தக் குழந்தை பால் அருந்தும்போது, தாயின் உடல் உணர்ந்துகொண்டு, உடனடியாக அந்தக் கிருமிக்கு எதிரான antibodies-ஐ ஒரு சில மணித்துளிகளில் தன் உடம்பில் தயாரித்து, அடுத்த வேளை பால் ஊட்டும்போது, தாய்ப்பாலுடன் கலந்து தந்துவிடுமாம். இவ்வளவு விரைவாக தாய், தன் நோய் எதிர்ப்பு ஆற்றலை குழந்தைக்கு அளிப்பதை ஆய்வில் பதிந்து, வியந்து சொல்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்த antibodies supply காலையில் அலுவலகத்துக்குச் செல்லும் முன் புட்டியில் பிடித்துவைத்த தாய்ப்பாலில் குழந்தைக்குக் கிடைப்பது இல்லை. கூடவே, தாய்ப்பால் சுரப்பு, தாயின் மார்புக் காம்பை உறிஞ்சும்போது மட்டுமே குழந்தை வாய்க்கு வரும். ஆனால், புட்டிப்பால் அருந்தும்போது குழந்தை பாலை உறிஞ்சாமல் இருந்தாலும், அது வழிந்து வாயில் நிரம்பி, சில நேரம் மூச்சுக்குழலுக்குள் செல்லவும்கூட வாய்ப்பு உண்டு.
இன்னொரு விஷயம், தாய்ப்பால் புகட்டும்போது, குழந்தையின் நிறைவும் மகிழ்வும்தான் தாயின் கண்ணுக்குத் தெரியும். எந்த அளவு குழந்தை பால் குடித்திருக்கிறது என தாய் கணக்கிட முடியாது. ஆனால், பராமரிப்பவர் புட்டியில் பிடித்துவைத்த தாய்ப்பாலை அப்படிக் கொடுக்க இயலாது. 'தாய்ப்பாலை வீணாக்கக் கூடாது’ எனப் பெரும்பாலும் புட்டி காலியாகும் வரை கொடுப்பர். இது சில நேரங்களில் கூடுதலாகப் போய், பின்னாளில் குழந்தை தேவைக்கு அதிகம் உண்ணும் பழக்கம் உடையவர்களாக மாறிவிடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதோடு, தாய்ப்பாலை புட்டியில் பீச்சும் தாய்க்கு மீண்டும் பால்சுரப்பு ஏற்படுவது, இயல்பாக குழந்தை பால் அருந்தும்போது சுரப்பதுபோல சீராக நடைபெறாது. மொத்தத்தில், புட்டிப்பால் புகட்டுவது என்பது, அம்மாவின் கழுத்துச் சங்கிலியை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, ஓரக் கண்ணால் அம்மாவை ரசித்தபடி, உறிஞ்சலுக்கு நடுவே 'களுக்’ சிரிப்பை கண்களில் காட்டி, குழந்தை பால் உறிஞ்சும் செயலுக்கு, இணை ஆகாது!
உரை மருந்து கொடுத்தாலும், சேய்நெய் தந்தாலும், வசம்பு கருக்கிக் குழைத்துக் கொடுத்தாலும் 'அந்தச் சங்கை எடு... கொஞ்சம்’ என்ற சத்தம் கேட்கும். வட மாவட்டத்தில் 'பாலாடை’ என்றும் தெக்கத்தி மண்ணில் 'சங்கு’ என்றும் அழைக்கப்படும் அந்தக் கால குழந்தை மருந்தூட்டும் கலன், இப்போதைய பிளாஸ்டிக் அவுன்ஸ் கிளாஸிலும் ட்ராப்பர் குழலிலும் தோற்றுப்போய், தொலைய ஆரம்பித்துவிட்டது.  வெள்ளி அல்லது வெண்கலத்தால் ஆன பாலாடையில், குழந்தைக்கு மருந்தூட்டும்போது தாயின் சுத்தமான ஆள்காட்டிவிரலால், மருந்தைக் குழைத்து வாயினுள் அனுப்பும் வசதி உண்டு. மடியில் குழந்தையைத் தலை உயர்த்திக் கிடத்தி, பாலாடையின் மழுங்கிய முனையை, இதழ் ஓரத்தில் வைத்து, மருந்தை அல்லது மருந்து கலந்த தாய்ப்பாலைப் புகட்டும் வித்தை, தாய்க்குக் கட்டாயம் தெரியவேண்டிய உயிர்வித்தை. முடிந்த மட்டும் பிஞ்சுக் குழந்தையின் வாய் நஞ்சு பிளாஸ்டிக்கைச் சுவைக்காமல் இருக்க, இந்த நல்ல பழக்கம் நிச்சயம் மீட்டு எடுக்கப்பட வேண்டும்.
ஏழு, எட்டாம் மாதத்தில் பக்கவாட்டில் இரண்டு பக்கங்களும் தலையணை அணைப்பில் உட்கார்ந்திருந்த குழந்தை, 11-ம் மாதத்தில்  நடை பழக ஆரம்பிக்கும்போது, அன்று நாம் வாங்கித் தந்த நடைவண்டி இப்போது இல்லை. கைகள் மட்டும் ஊன்றிப் பிடித்து நடை பயிலும் அந்தக் கால வண்டிக்கு இப்போதைய walker இணையாவதே இல்லை. குழந்தை மருத்துவ ஆய்வாளர்கள், 'குழந்தைகளுக்கு walker வாங்கித் தராதீர்கள்’ எனக் கூறுகிறார்கள். குழந்தை சரியாக நடப்பதற்கு தசை வலுவை, இடுப்பு வலுவைப் பெறும் முன்னர், எல்லா பக்கமும் தாங்கிக்கொள்ளும் walker வாகனம் உண்மையில் குழந்தையின் இயல்பான நடைத்திறனைத் தாமதப்படுத்தும். ஆனால், நம் ஊர் நடைவண்டி அப்படி அல்ல. பக்கவாட்டுப் பிடி இல்லாததால் நடைக்கான தசைப்பயிற்சியை, இடுப்பு கால்தசைக்கு ஏற்றவாறு தந்து நடையைச் செம்மையாக்கும்.
இப்படி, நம் இனப் பழக்கங்கள் எல்லாம் பெருவாரியாக நம் நலத்துக்கு வித்திடும் நலப் பழக்கங்கள். இடையிடையே வரலாற்றில் அப்போதைய சமூக, மத, இனப் பிணக்குகளும், ஆளுமைப் புகுத்தல்களும் செருகி வந்திருந்தாலும், இன்னும் மிச்சம் இருக்கும் பழக்கங்களையாவது எடுத்தாளத் தவறிவிடக் கூடாது. கலோரி கணக்கிலும், காப்புரிமை சூட்சுமத்துக்குள்ளும் நவீன உணவாக்கம் கட்டமைக்கப்படும்போது, எதைச் சாப்பிட வேண்டும் என மட்டும் சொல்லிச் சென்றுவிடாமல், எப்படிச் சாப்பிட வேண்டும், எதற்குச் சாப்பிட வேண்டும் என எப்போதோ எழுதிவைத்த மரபு நம் மரபு மட்டும்தான்.
'முன்துவ்வார் முன்னெழார் தம்மிற் பெரியார் தம்பாலி ருந்தக்கால்’ என நம்மோடு நம் வயதில் பெரியவர் உணவருந்தினால், அவர்கள் சாப்பிட்டு எழும் முன்னதாக நாம் எழக் கூடாது என நம் இனக் கூட்டம் கிட்டத்தட்ட 1,800 ஆண்டுகளுக்கு முன் ஆசாரக் கோவை நூலில் சொன்னதில் உணவு அறிவியல் கிடையாது; ஆனால் ஓங்கிய உணவுக் கலாசாரம் உண்டு. அதேபோல் தலை தித்திப்பு, கடை கைப்பு எனச் சாப்பிடச் சொன்ன முறையில் இனிப்பில் தொடங்குவது, விருந்தோம்பலில் மகிழ்வைத் தெரிவிக்கும் பண்பாட்டுக்கு மட்டும் அல்ல; ஜீரணத்தின் முதல் படியான உமிழ்நீரை முதலில் சுரக்கவைக்கும் என்பதற்காகவும் சேர்த்துத்தான். இப்படி மாண்பு நிறைந்த உணவுப் பழக்கத்தை, அளவு அறிந்து, பகுத்து உண்டு உண்ணச் சொன்ன செய்தி நம் மண்ணில் பந்தியில் மட்டும் பரிமாறப்படவில்லை; பண்பாட்டிலும் சேர்த்துத்தான். இதை எப்போது புரிந்துகொள்ளப்போகிறோம்? எப்போது முழுமையாகக் கைக்கொள்ளப்போகிறோம்?
- நலம் பரவும்...

'பதார்த்த குண சிந்தாமணி’ எனும் பழம்பெரும் சித்த நூல் சொல்லும் சில நலவாழ்வுப் பழக்கங்கள்:
நாளுக்கு இரண்டு முறை மலம் கழிப்பது.
 வாரத்துக்கு ஒரு முறை எண்ணெய்க் குளியல்.
 மாதத்துக்கு ஒரு முறை உடலுறவு.
 45 நாட்களுக்கு ஒரு முறை நாசியில் (nasal drops) மருந்து விடுவது.
 நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பேதி மருந்து சாப்பிடுவது.
 வருடத்து இரண்டு முறை வாந்தி மருந்து சாப்பிடுவது.
செய்யக் கூடாத விஷயங்கள்:
 முதல் நாள் சமைத்த உணவு அமுதமாகவே இருந்தாலும் சாப்பிடக் கூடாது.
 கருணைக்கிழங்கு தவிர பிற கிழங்குகளைச்  சாப்பிடக் கூடாது.
 பகலில் தூக்கமும் புணர்ச்சியும் கூடாது.
 நாளுக்கு இரண்டு பொழுதுகள் தவிர மூன்று பொழுதுகள் சாப்பிடக் கூடாது.
 பசிக்காமல் உணவு அருந்தக் கூடாது.
 உணவு உண்ணும்போது இடையிடையே  நீர் அருந்தக் கூடாது.
 தும்மல், சிறுநீர், மலம், கொட்டாவி, பசி, தாகம்,  வாந்தி, இருமல், ஆயாசம், தூக்கம், கண்ணீர்,    உடலுறவில் சுக்கிலம், கீழ்க்காற்று, மூச்சு இவற்றை அடக்கக் கூடாது.
கண்டிப்பாகச் செய்யவேண்டியவை:
 உணவு சாப்பிட்ட பிறகு குறு நடை.
 நீரைச் கருக்கி, மோரைப் பெருக்கி, நெய்யை உருக்கி உண்பது.
 வாழைப்பழத்தைக் கனியாக அல்லாமல்   இளம்பிஞ்சாகச் சாப்பிடுவது.
 எண்ணெய்க் குளியலின்போது வெந்நீரில் குளிப்பது.

Wednesday, August 6, 2014

மனிதன் அவன் உடலை அறிய ஆரம்பித்தான் 
குரங்குகளைத் தவிர மற்ற விலங்குகளுக்கு இனிப்பின் சுவை தெரியாது. ஒரு நாய்க்கு அரை கிலோ சாக்லேட் போட்டால், அது அத்தோடு காலி. எனக்குத் தெரிந்த ஒருவர் ஒரு வாரம் வெளியூர் செல்ல நேர்ந்தது. அவர் வளர்க்கும் பூனைக்கு ஒரு டஜன் வாழைப்பழத்தைப் போட்டுவிட்டுப் போனார்.  ஊரில் இருந்து திரும்பி வந்து கதவைத் திறந்தால், ஒரே அழுகல் நாற்றம். வீட்டை விட்டு ஓடிய பூனை அதற்குப் பிறகு திரும்பி வரவே இல்லை.
குரங்குகளோடு மரபணு ஒத்திருப்பதால், நமக்குப் பழங்களின் சுவையும் தெரியும். விலங்குகளை வேட்டையாடி பச்சையாக தொடக்கத்தில் உண்ணும்போது, அவற்றின் உடல் சூட்டை அவன் உணர முடிந்தது. சூடாக இருக்கும்போதே சாப்பிட்ட அவன், நாளடைவில் சைவ உணவையும் சூடாக சாப்பிடக் கற்றான். பழங்களைத் தின்ற பழைய மரபணுவால், அவனுக்கு துவர்ப்பு, கசப்பு, இனிப்பு, புளிப்பு என்ற அத்தனை சுவை மொட்டுகளும் வந்ததோடு, ஆவி பறக்கச் சூடாக உண்ணும் பழக்கமும் வந்தது.  
மனித உடலில் இன்னும் புலப்படாத மர்மங்கள் இருக்கின்றன. மற்ற விலங்குகளுக்கு அவற்றின் உடலில் இருக்கும் உறுப்புகளின் விவரம் தெரியாது.   சின்ன காயம் ஏற்பட்டால், அவை கிருமிகளின் வசப்பட்டு மண்டையைப் போட்டுவிடும். மனிதன் மட்டும் அவன் உடலை அறிய ஆரம்பித்தது விசித்திரமான பயணத்தின் தொடக்கம்!
மனிதன் உடலைப் பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் காட்டியது அவன் சிந்திக்கத் தொடங்கியபோது ஏற்பட்ட சிலிர்ப்பான  உணர்வு. விலங்குகளின் உடலுக்குள் இருக்கும் பாகங்கள் அவனுக்கு மாமிசப்பட்சிணியாக ஆனபோது தெரிய ஆரம்பித்தன.  அவன் கும்பலைச் சார்ந்தவர்கள் விலங்குகளுக்குப் பலியாகும்போதும், அவை சாப்பிட்டு மீதமிருக்கும் பாகங்களை அவன் பார்க்க நேர்ந்தபோதும் தெளிவு உண்டானது.  அப்போதுதான் உடலைப் பற்றிய புரிதல் அவனுக்குப் பிடிபட ஆரம்பித்தது.  அவனுடைய கைகளைப் பயன்படுத்தும் விதங்களை இன்னும் அவனால் மெருகேற்ற முடிந்தது. காடுகளில் திரிந்தபோது அவன் அதிகமான நோய்களைச் சந்திக்கவில்லை. நிலையாகத் தங்கிய பிறகு அவன் உடல், குறைபாடுகளுக்கு ஆளாகத் தொடங்கியது.
மனிதன் மாறி விட்டான்!, இறையன்பு 

Tuesday, August 5, 2014

மனிதன் பேச தொடங்கினான்
நாக்கு வேறுபட்டு குரல்வளை வித்தியாசப்பட்டு விதவிதமான ஓசைகளை எழுப்பும் திறமை நமக்கு வாய்த்தபோது, நம்மால் பேசுவதற்கான ஒரு மொழியை அடைய முடிந்தது. அப்போது நாம் நம்முடைய அறிவை அடுத்த தலைமுறைக்கு பத்திரப்படுத்திவிட்டுச் செல்ல முடிந்தது. எனவே, சென்ற தலைமுறை கற்றதையும் படிக்கட்டாக வைத்துக்கொண்டு இந்தத் தலைமுறை  அதன் மேல் ஏறி நின்று இன்னும் உயரமாகக் காட்சியளித்தது. மொழியும் ஒருமித்த கற்றலும் நம் மேன்மைக்கு முதல் இரண்டு காரணங்கள். மூன்றாவது காரணம், மனிதன் நேரத்தை உருவாக்கியது.
இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் உள்ள 100 பொருள்களைக் கொண்டு உலக வரலாற்றை நெய்ல் மெக்ரிகர் என்பவர் எழுதியிருக்கிறார். அதில் அவர் 'ஓல்டுவை கைக்கோடரி’ என்கிற தான்சானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பொருளை மூன்றாவது அம்சமாகச் சேர்த்திருக்கிறார்.  
ஓல்டுவை கைக்கோடரி சகலவிதமான பணிகளுக்கும் பயன்படுத்தப்பட்ட பொருள். அரைக்கவும் கிழிக்கவும் மசிக்கவும் நறுக்கவும் வெட்டவும் உடைக்கவும், அந்த ஒரே ஒரு பொருள் ஒரு கட்டத்தில் நம் முன்னோர்களால் கையாளப்பட்டது. அந்த கைக்கோடரியில் இருக்கிற முக்கிய நுட்பமே அது சொல்லும் சூசகத் தகவல்கள்​தான்.
கல்லால் ஆன ஒரு பொருளை உண்டாக்கும்போது, நம் நரம்பு மண்டலம் எப்படிச் செயல்படுகிறது என்பதை அறிய வேண்டும். அப்படி ஒரு பொருளை இப்போது நாம் செதுக்கினால்கூட, நம் மூளையின் ஒரு பகுதி மட்டும் அதிகமாக சுறுசுறுப்படைகிறது. இப்போது நாம் பேசும்போது எந்தப் பகுதி மூளையில் இயங்குகிறதோ, அந்தப் பகுதிதான் அப்படியொரு கைக்கோடரியைச் செய்யும்போது இயங்குகிறது. எனவே, மனிதன் உழைக்கத் தொடங்கியபோதுதான் உரைக்கவும் தொடங்கினான் என்பது, அதிசயமான அறிவியல் நுணுக்கம். அப்போதுதான் அவன் பேச முயன்றிருப்பான்.

இரண்டு கால்களால் நிற்கத் தொடங்கிய​போது கைகளுக்குக் கிடைத்த விடுதலையை அவன் கற்கருவிகள் செய்யப் பயன்படுத்தினான். அவன் வேட்டையாடுபவனாகவும் சேகரிப்பாளனாகவும் இருக்கிறபோது, பசியை ஆற்றவே அவன் முழு நேரமும் விரயமாகிவிட்டது. அவனுடைய ஆயுதங்களில் முன்னேற்றமும் வேட்டையாடுதலில் வீரியமும் கலந்தபோது, சமூக ஒற்றுமை தொடங்கியது.  
குரங்குகள் பழுத்த பழங்களைப் பறித்தால், அடுத்தவற்றுக்குக் கொடுக்காமல் அவையே உண்டுவிடும். ஏற்காடு செல்பவர்களில் சிலர் வாழைத்தாரை வைத்துக்கொண்டு ஜீவகாருண்யம் படைத்தவர்களைப்போல வழியில் தென்படும் குரங்குகளுக்கு பழங்களைப் போட்டவண்ணம் செல்வார்கள். ஒரே குரங்கே ஓடி ஓடி வந்து எல்லா இடங்களிலும் மற்றவற்றை முந்தி பழங்களை அபகரித்துக்கொள்ளும். அவற்றில் சில வாகனங்களில் அடிபட்டு இறந்துபோவதும் உண்டு. காட்டு விலங்குகளுக்கு ஊட்ட முயற்சிப்பது உன்னதமான செயல்பாடு அல்ல. பகிர்ந்துகொள்ளும் பழக்கம் குரங்குகளிடம் இல்லாததால்தான், சிலரை குரங்கு என்று திட்டுகிறோம்.      
மாமிசப் பட்சிணிகள் உணவைப் பகிர்ந்துகொள்கின்றன. ஒரு புலி  காட்டெருமையை வேட்டையாடினால் தனக்கு வேண்டியதை சாப்பிட்டுவிட்டு இடத்தைக் காலிசெய்கிறது. சிங்கம் வேட்டையாடினால் மீதியை கழுதைப்புலிகள் ஆக்கிரமித்துக்கொள்கின்றன. அவற்றுக்குப் பிறகு நரிகள். அவை விட்டவற்றை வல்லூறுகள். எஞ்சி இருக்கும் எலும்புகள், எறும்புகளுக்கு. மற்றவை மண்ணில் மக்கி உரமாகின்றன.
மனிதன் மாமிசம் உண்ணும்​போதுதான், கொரிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டு திவ்யமாக சாப்பிடக் கற்றுக்கொண்டான். மிச்சம் இருப்பதைப் பகிர்ந்து​கொண்​டான். அப்போது அவனுக்கு நேரம் கிடைத்தது. அந்த நேரத்தில் அவனுடைய அறிவைக் கூர்மைப்படுத்தினான். ஆயுதங்களைச் செம்மைப்படுத்தினான்.        
அவன் சிந்திக்கத் தெரிந்ததால் வேறுபட்டான். அவன் மனமே அவனைப் படைப்பின் மையமாக ஆக்கியது. பார்ப்பதையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும் ஆவல் அவனுக்கு ஏற்பட்டது. பறவைகள் பழத்தைத் தின்பதோடு நிறுத்திக்கொண்டன. அவை எப்படி முளைக்கின்றன என்கிற உந்துதல் ஆறாம் அறிவின் காரணமாக அவனுக்கு ஏற்பட்டது. மிருகங்கள் புல்லைத் தின்பதோடும், புலாலைத் தின்பதோடும் மகிழ்ச்சியடைந்தன. மனிதன் விவசாயம் செய்யத் தொடங்கினான். மனிதன் நிலையாகத் தங்கி விவசாயம் செய்து வாழ ஆரம்பித்து 10,000 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன.
அவன் வளர்க்கும் பயிர்களைச் சாப்பிட காட்டு மிருகங்கள் அவன் வளாகத்தில் கால் எடுத்து வைத்தன. அவற்றை வளர்ப்பு மிருகங்கள் ஆக்கினான். அவற்றின் மாமிசமும் பாலும், சேமித்து வைக்கும் தானியங்களும் அவனுக்கு இளைப்பாற நேரம் தந்தது. இதுநாள் வரை 12 மணி நேரம் செய்த வேலையை, நான்கு மணி நேரத்தில் அவன் செய்ய முடிந்தது. எட்டு மணி நேரம் மிச்சமானது. இப்படித்தான் மனிதன் நேரத்தை உருவாக்கினான். வேறு எந்த மிருகமும் நேரத்தை உருவாக்க முடியாது.
மனிதன் இன்றுகூட நேரத்தை உரு​வாக்கும் முயற்சியிலேயே தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கிறான். இன்று விஞ்ஞானம் எவ்வளவு செறிவாக நேரத்தை உருவாக்க முடியும் என்றுதான் அக்கறை செலுத்தி வருகிறது.  விமானம், ரயிலைவிட அதிக நேரத்தை உருவாக்குகிறது. மின்னஞ்சல், தபாலைவிட அதிக காலத்தை மிச்சம் பிடித்துக் கொடுக்கிறது. இயந்திரங்கள் உற்பத்தி முறையை விரைவுபடுத்தி நேரத்தை உருவாக்குகின்றன.
சுருக்கமாகச் சொன்னால், நம் அத்தனை கண்டுபிடிப்பு​களுமே நேரத்தை உருவாக்குபவையே! குழந்தை குறைப் பிரசவமாகிவிட்டால், வெளியே உள்ள இங்க்குபேட்டர் மூலம் நம்மால் செயற்கை கருப்பையை உருவாக்க முடியும்.  இந்த வசதிகள் எல்லாம் விலங்குகளுக்கு இல்லை. இதுதான் மனிதனை உலகமெங்கும் பரவி விரிய வைத்தது. 
மனிதன் மாறி விட்டான்!, இறையன்பு 
மற்ற உயிரினங்கள் தோற்றுப் போனதற்கும் மனிதன் வெற்றி பெற்றதற்கும் மூன்று அடிப்படைக் காரணங்கள் உண்டு.    
ஒரு சிங்கம் காட்டைப் பற்றி ஓர் அங்குலம் விடாமல் அறிந்து வைத்திருந்தாலும், அதை அடுத்த தலைமுறைக்கு அறிவுறுத்திவிட்டுச் செல்ல முடியாது. அதன் அத்தனைத் திறமையும் அதன் மரணத்தோடு சமாதியாகிவிடுகிறது. மனிதன் அவனுடைய அறிவை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல முடிந்தது. அதற்குக் காரணம் மற்றவற்றுக்கு இல்லாத நம்முடைய பேசும் ஆற்றல்.
மனிதன் மாறி விட்டான்!, இறையன்பு 
யார் எல்லோரோடும் கலக்கும் ஆற்றல் பெற்றிருக்கிறார்களோ, அவர்களையே இயற்கை ஆசீர்வதிக்கிறது!

இந்த உண்மையை எளிமையான உதாரணம் மூலமாக விளக்குகிறேன். ஸ்டான்லி மில்லர், ஹெரால்ட் யூரே... ஆகிய இருவரும் சிகாகோ பல்கலைக்கழகப் பேராசிரியர்கள். ஏராளமான பரிசோதனைகளைச் செய்தவர்கள். மீத்தேன், அமோனியா, ஹைட்ரஜன், தண்ணீர் ஆகிய நான்கையும் கண்ணாடிக் குடுவைகளில் வைத்து அவர்கள் ஒரு பரிசோதனைச் செய்தனர். இது நடந்து அரை நூற்றாண்டு காலம் ஆகிவிட்டது. சுமார் ஏழு நாட்கள் அந்தச் சோதனை நடந்தது. அவற்றின் முடிவில், கார்பன் பற்றி சில கண்டுபிடிப்புகளை வெளியிட்டார்கள்.
10 சதவிகித கார்பன் கனிமங்கள் தன்னிச்சையாகப் பலவற்றோடு கலந்து உயிர் தோன்றுவதற்குத் தேவையான சர்க்கரை, கொழுப்பு, நியூக்ளிக் அமிலங்கள் போன்றவற்றை உருவாக்குகின்றன என்பதுதான் இவர்களது கண்டுபிடிப்பு.  இத்தனைக்கும் மீத்தேனில் மட்டும்தான் கார்பன் இருக்கிறது. கார்பன் எதுவோடு வேண்டுமானாலும் கலக்கும் சக்தி கொண்டது என்று கண்டுபிடித்தார்கள். பூமியில் இரண்டு விழுக்காடு மட்டும்தான் கார்பன் இருக்கிறது. நம் உடலிலோ அது 20 விழுக்காடு. பூமியில் கார்பனைப்போல எத்தனையோ மடங்கு சிலிக்கான் இருக்கிறது. ஆனால், கணினியில் சில்லு செய்யப் பயன்படுத்தும் சிலிக்காவை, மனிதனின் செல்லைச் செய்ய இயற்கை தேர்ந்தெடுக்கவில்லை. யார் எல்லோரோடும் கலக்கும் ஆற்றல் பெற்றிருக்கிறார்களோ அவர்களையே இயற்கை ஆசீர்வதிக்கிறது என்று இதனால்தான் சொல்கிறோம்!
மனிதன் மாறி விட்டான்!, இறையன்பு 
மனிதன் உருவானான்
பனியுகத்தின்போது மரங்களில் இருந்து சமவெளிக்கு வந்த குரங்குகளின் உடலில் மாற்றம் ஏற்பட்டன. அவை சூழலுக்கேற்ப கிளைகளாகப் பிரிந்தன.
தாவ முடியாத சூழலில் வேட்டையாடி உயிர்வாழத் தள்ளப்பட்ட ஓர் உயிரினம் உருவானது. அந்த இனம் பழங்களை நம்பி வாழ முடியாது. புலிகளோடும் ஓநாய்களோடும் போட்டிபோட முடியாது. நகங்கள் இல்லை, கூர்மையான பற்கள் இல்லை. அது தன்னைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது. நெருக்கடிகளின்போதுதான் நமக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் ஆற்றல் நம்மையும் அறியாமல் உடலில் இருந்து வெளிப்படும். பருந்து வருகிறபோதுதான் குஞ்சுகளைக் காப்பாற்ற கோழி பறந்து எதிர்க்கிறது அல்லவா? அதனைப்போல!  
இந்த இடைப்பட்ட இனம் இரண்டு கால்களில் நிற்க முயன்றது.  கொரில்லாவும் சிம்பன்சியும்கூடப் பின்னங்கால்களில் நிற்க முடியும். ஆனால், கொஞ்சம் நேரம்தான்.  இந்த இடைப்பட்ட குரங்கு மனிதன் இரண்டு கால்களில் நின்று நின்று பயிற்சி எடுத்து, முதுகுத்தண்டு அதற்குத் தோதாக வளைய, இப்போது அதில் முன்னேற்றம் பெற்றான்.  
அப்படிச் செய்யும்போதெல்லாம் கைகள் இரண்டும் விடுதலையாயின.  அவற்றைக் கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இரண்டாவதாக, கூட்டமாக வாழ்ந்தால்தான் பலமான எதிரியை சமாளிக்க முடியும். எனவே, கும்பல் கும்பலாக வாழத் தொடங்கினான். மூன்றாவதாக, தந்திரமாக இருந்தால்தான் தப்பிக்க முடியும். எனவே, எதிரிகளைக் காட்டிலும் தந்திரமாக வாழக் கற்றான். அதற்கு அவனுடைய விடுபட்ட கைகள் உதவின.  
கைகளைக் கொண்டு கல்லில் ஆயுதங்கள் வடித்தான். மரத்தில் கட்டைகள் உருவாக்கினான். நெருப்பை அறிந்தான். அவன் சுயநலமாக இருப்பதற்கு, சுயநலம் இல்லாமல் இருந்தால்தான் சாத்தியம் என்பதை அறிந்துகொண்டான்.  எனவே கூட்டத்துக்குள் இருக்கும் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் அனுசரிக்க ஆரம்பித்தனர். அவன் உடல் படிப்படியாக பரிணாம வளர்ச்சியடைந்தது.    அவன் மூளை பெரிதாகத் தொடங்கியது. 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு முழுமையாய் நிமிர்ந்த மனிதன் உருவானான். 
-மனிதன் மாறி விட்டான்!, இறையன்பு 

Friday, August 1, 2014

வைரமுத்து 60 கேள்விகள்

மனிதனின் உண்மை முகம் எது?''
''எந்தத் துறையில் ஒருவன் பொருள் ஈட்டினானோ அல்லது புகழ் ஈட்டினானோ, அந்தத் துறையைக் கழித்துவிட்டு மிச்சப்படுவது எதுவோ அது!''

'கண்ணதாசன், வாலி வரிகளில் பிடித்தவை?''
''நூற்றுக்கணக்கில் சொல்லலாம்...
'ஏழைகளின் ஆசையும்
கோவில்மணி ஓசையும்
வேறுபட்டால் என்ன செய்வது?  - தர்மமே
மாறுபட்டால் எங்கு செல்வது?’ - இது கண்ணதாசன் வரிகள்.
'மண்குடிசை வாசலென்றால்
தென்றல் வர வெறுத்திடுமா?
மாலை நிலா ஏழையென்றால்
வெளிச்சம் தர மறுத்திடுமா? ’ - இது வாலி வரிகள். இன்னும் இப்படி எத்தனையோ!''

உங்கள் வர்ணனையில் உங்களுக்குப் பிடித்த வரிகள்?''
'' 'சோழன் குயில் பாடுகையில் சோலைக் குயில் ஓய்வெடுக்கும்.
மெல்லினங்கள் பாடு கண்ணே வல்லினங்கள் வாய் வலிக்கும்’!''

புத்தகங்களில் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கும்போது என்ன எழுதித் தருவீர்கள்?''
''சிறகிருந்தால் போதும்
சிறியதுதான் வானம்!''

''மறக்க முடியாத வாசகம்?''
''குடலில் ஒரு அவுன்ஸ் மலமும், மூளையில் ஒரு அவுன்ஸ் அவமானமும் மிச்சம் இல்லாத மனிதன் எவனும் இல்லை!''

'நீங்கள் ரசித்துக்கேட்ட அனுபவ மொழி?''
''முஸ்லிம் பெரியவர் ஒருவர் சொன்னது: 'நீ ராஜாவோ... பிச்சைக்காரனோ... உண்டது, உடுத்தது, கொண்டது, கொடுத்தது... இந்த நாலும்தான் மிச்சம்’!''