மனிதன் உருவானான்
பனியுகத்தின்போது மரங்களில் இருந்து சமவெளிக்கு வந்த குரங்குகளின் உடலில் மாற்றம் ஏற்பட்டன. அவை சூழலுக்கேற்ப கிளைகளாகப் பிரிந்தன.
தாவ முடியாத சூழலில் வேட்டையாடி உயிர்வாழத் தள்ளப்பட்ட ஓர் உயிரினம் உருவானது. அந்த இனம் பழங்களை நம்பி வாழ முடியாது. புலிகளோடும் ஓநாய்களோடும் போட்டிபோட முடியாது. நகங்கள் இல்லை, கூர்மையான பற்கள் இல்லை. அது தன்னைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது. நெருக்கடிகளின்போதுதான் நமக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் ஆற்றல் நம்மையும் அறியாமல் உடலில் இருந்து வெளிப்படும். பருந்து வருகிறபோதுதான் குஞ்சுகளைக் காப்பாற்ற கோழி பறந்து எதிர்க்கிறது அல்லவா? அதனைப்போல!
இந்த இடைப்பட்ட இனம் இரண்டு கால்களில் நிற்க முயன்றது. கொரில்லாவும் சிம்பன்சியும்கூடப் பின்னங்கால்களில் நிற்க முடியும். ஆனால், கொஞ்சம் நேரம்தான். இந்த இடைப்பட்ட குரங்கு மனிதன் இரண்டு கால்களில் நின்று நின்று பயிற்சி எடுத்து, முதுகுத்தண்டு அதற்குத் தோதாக வளைய, இப்போது அதில் முன்னேற்றம் பெற்றான்.
அப்படிச் செய்யும்போதெல்லாம் கைகள் இரண்டும் விடுதலையாயின. அவற்றைக் கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இரண்டாவதாக, கூட்டமாக வாழ்ந்தால்தான் பலமான எதிரியை சமாளிக்க முடியும். எனவே, கும்பல் கும்பலாக வாழத் தொடங்கினான். மூன்றாவதாக, தந்திரமாக இருந்தால்தான் தப்பிக்க முடியும். எனவே, எதிரிகளைக் காட்டிலும் தந்திரமாக வாழக் கற்றான். அதற்கு அவனுடைய விடுபட்ட கைகள் உதவின.
கைகளைக் கொண்டு கல்லில் ஆயுதங்கள் வடித்தான். மரத்தில் கட்டைகள் உருவாக்கினான். நெருப்பை அறிந்தான். அவன் சுயநலமாக இருப்பதற்கு, சுயநலம் இல்லாமல் இருந்தால்தான் சாத்தியம் என்பதை அறிந்துகொண்டான். எனவே கூட்டத்துக்குள் இருக்கும் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் அனுசரிக்க ஆரம்பித்தனர். அவன் உடல் படிப்படியாக பரிணாம வளர்ச்சியடைந்தது. அவன் மூளை பெரிதாகத் தொடங்கியது. 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு முழுமையாய் நிமிர்ந்த மனிதன் உருவானான்.
-மனிதன் மாறி விட்டான்!, இறையன்பு
No comments:
Post a Comment
What's in your mind?